செய்திகள்
திண்டுக்கல் அருகே டிராக்டர் கவிழ்ந்து சிறுமி பலி
திண்டுக்கல் அருகே கோவில் விழாவிற்கு சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து சிறுமி பலியானார்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகில் உள்ள வி.எஸ்.கோட்டை சில்வார்பட்டியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் அய்யலூர் வண்டிகருப்பண சாமி கோவிலுக்கு கிடா விருந்துக்காக ஒரு டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர்.
செங்குறிச்சி ஆலம்பட்டி பகுதியில் டிராக்டர் வந்துகொண்டிருந்தபோது முன்னால் ஒரு மூதாட்டி சாலையை கடக்க முயன்றார். இதனால் டிரைவர் திடீரென பிரேக் போடவே நிலை தடுமாறி அருகில் இருந்த பாறையின் மீது மோதினார். இதனால் டிராக்டரில் இருந்த அனைவரும் பள்ளத்தில் கவிழ்ந்தனர்.
இதில் காளியப்பன் மகள் ஹேமாமாலினி (வயது7) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். டிராக்டரில் வந்த மாரிமுத்து, நந்தினி, காளியப்பன் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.