கருணாநிதி மறைவையொட்டி கீரனூர் பகுதிகளில் அமைதி ஊர்வலம்
கீரனூர்:
கீரனூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் அண்ணாதுரை தலைமையில் கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நடந்தது. பின்னர் இரவில் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவிக்குமார், துணை தலைவர் பழனி, இம்தியாஸ், மணிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மாலை வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்கள் ஏதும் ஓடாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆட்டோ, டாக்சி ஓட்டுனர் சங்கம், விவசாய சங்கம், அரிமா சங்கம் என அனைத்து தரப்பினரும் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொம்மாவூரில் மாவட்ட தொண்டர் அணிஅமைப்பாளர் கராத்தே முத்து தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது.
இதில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர், கீரனூர் அடுத்த குளத்தூரில் தி.மு.க. கிளை கழகம் சார்பில் செயலாளர் சேகர் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கடைவீதி பகுதியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பெரியசாமி, சரத்துகுமார், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.