செய்திகள்

புதுக்கோட்டை அருகே மூதாட்டி படுகொலை- மர்மநபர்கள் வெறிச்செயல்

Published On 2018-08-03 11:29 GMT   |   Update On 2018-08-03 11:29 GMT
புதுக்கோட்டை அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி கோவில் தெருவை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 70). மருதமுத்துவும், அவரது மகன் பரிமளமும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் செல்லம்மாள் மட்டும் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து அதில் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் இன்று காலை வீட்டிற்குள் செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது செல்லம்மாளின் கழுத்து மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்லம்மாளை கொலை செய்த மர்ம நபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று சந்தேகமடைந்த போலீசார் வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தினர். ஆனால் அவற்றில் எந்தவித நகையும் இல்லை. மேலும் செல்லம்மாளும் நகைகள் எதுவும் அணிந்திருக்க வில்லை. இதனால் வேறு ஏதாவது பிரச்சினை காரணமாக மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News