நெல்லை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் மது விற்ற 22 பேர் கைது
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று இரவு அரசு மதுபானக்கடைகள் அடைத்த பிறகு ‘பார்கள்’ அருகிலேயே சிலர் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதுதொடர்பாக அதிரடி சோதனை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் மற்றும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணாசிங் ஆகியோர் உத்தரவிட்டனர்.
அதன்பேரில் நெல்லை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.அதில் நெல்லை புறநகர் மாவட்டத்தில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 197 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை மாநகர பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 13 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நடந்த சோதனையில் 20 வழக்குகளில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 210 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப் பட்டன.