செய்திகள்

ஸ்ரீமுஷ்ணத்தில் பள்ளிவாசல் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Published On 2018-07-24 11:16 GMT   |   Update On 2018-07-24 11:16 GMT
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பள்ளிவாசல் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி பகுதியில் பள்ளி வாசல் உள்ளது. பள்ளி வாசலை பராமரித்து வருபவர் நேற்று இரவு வழக்கம்போல் பள்ளிவாசலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் பள்ளிவாசலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த ஒரு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர். மற்றொரு உண்டியலை தூக்கிக்கொண்டு வெளியே சென்றனர். பின்னர் அந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு உண்டியலை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இன்று அதிகாலை வழக்கம்போல் தொழுகைக்கு வந்த முஸ்லிம்கள் பள்ளி வாசலின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பள்ளிவாசலில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. மேலும் அங்கிருந்த உண்டியலில் பணம் திருடுபோய் இருந்தது. மற்றொரு உண்டியலை காணவில்லை. அதை தேடி பார்த்தபோது பள்ளிவாசல் அருகே உள்ள புதரில் கிடந்தது.

இதுகுறித்து பள்ளி வாசல் தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு பள்ளிவாசல் அருகே உள்ள துரைசாமி என்பவருக்கு சொந்தமான கடையில் பூட்டை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரம் பொருட்கள் மட்டும் ரூ.3 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த பகுதியில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News