தேவகோட்டையில் பெண் தற்கொலையில் மர்மம்: கணவர் மீது போலீசில் புகார்
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மாந்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 48). இவரது மனைவி பிரேமா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கணவன்-மனைவியும் தேவகோட்டை பஸ் நிலையத்தில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். மகன்கள் இருவரும் வெளியூரில் வேலை பார்ப்பதால் கணவன், மனைவி மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு இருவரும் வீடு திரும்பினர். சிறிதுநேரத்தில் ராஜா வெளியே புறப்பட்டார்.
பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது பிரேமா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ் பெக்டர் மருது ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே பிரேமாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், ராஜா மீது சந்தேகம் உள்ளதாகவும் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.