செய்திகள்

குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து ஊராட்சி செயலாளர் மரணம்

Published On 2018-07-18 11:27 GMT   |   Update On 2018-07-18 11:27 GMT
போச்சம்பள்ளி அருகே குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்த ஊராட்சி செயலாளர் மரணமடைந்தார்.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கீழ்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மூர்த்தி (வயது 40).

இவர் கீழ்குப்பம் மற்றும் பாரூர் ஆகிய 2 ஊராட்சிகளுக்கு சேர்த்து செயலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜீவா என்ற மனைவியும், பிரீத்தி (4), பூமிகா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

மூர்த்தியும் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் சதீஸ் என்பவருடன் சேர்ந்து பாரூர் ஏரி அருகே உள்ள பாலத்தின் மீது மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது போதை தலைக்கேறிய மூர்த்தி பாலத்தின் மீது எழுந்து நிற்க முயன்றபோது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாரூர் போலீசாருக்கும், மூர்த்தியின் உறவினர்களுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த மூர்த்தியின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

பாரூர் போலீசார் வந்து மூர்த்தியின் உடலை கைப்பற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News