செய்திகள்

ஆண்டிமடம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

Published On 2018-07-16 16:44 GMT   |   Update On 2018-07-16 16:44 GMT
ஆண்டிமடம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
வரதராஜன்பேட்டை:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அண்ணா தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 36). இவர் ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வேல்விழி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஜெயபிரகாஷ் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தார். பின்னர் காலையில் வழக்கம் போல் வேல்விழி எழுந்து பார்த்த போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே உள்ள மற்றொரு அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு, ரூ.1,000-த்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதேபோல் அதே தெருவில் ஜெயபிரகாஷ் பக்கத்து வீட்டில் உள்ள பத்மநாபன், சகுந்தலா ஆகியோரின் வீடுகளிலும் பின் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவை திறந்து நகைகளை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வீட்டில் நகைகள் ஒன்றும் இல்லாததால் ஏமாற்றத்துடன் மர்மநபர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஜெயபிரகாஷ் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News