செய்திகள்

திருமானூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Published On 2018-07-07 16:45 GMT   |   Update On 2018-07-07 16:45 GMT
திருமானூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-ரூ.10 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள காரைபாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 55). இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 40). இந்த தம்பதியினர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். நெசவுத்தொழிலாளியான பாலு தற்போது நெசவுத்தொழில் நலிவடைந்ததால் தனது மகளுடன் சென்னையில் தங்கி அங்குள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலு சொந்த ஊருக்கு வந்து இருந்தார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி பாலு வீட்டை பூட்டிவிட்டு மனைவி கிருஷ்ணவேணியுடன் ஆடுதுறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று பாலுவின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து பாலுவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வீட்டுக்கு பாலு தனது மனைவியுடன் வந்தார். பின்னர் அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாலு குடும்பத்தினர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகைகள், பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News