செய்திகள்

சேகர் ரெட்டி உட்பட 5 பேர் மீதான 2 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-06-27 11:37 IST   |   Update On 2018-06-27 11:37:00 IST
சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் 34 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பான 3 எப்.ஐ.ஆர் பதிவுகளில் 2 எப்.ஐ.ஆர் பதிவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை :

தமிழக அரசின் பிரபலமான ஒப்பந்ததாரராக இருந்தவர் சேகர் ரெட்டி. அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலருடன் நெருக்கமான தொடர்பு இருந்தது.

கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சென்னையில் இருக்கும் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சோதனையில் ரூ.9.5 கோடி மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் பெருமளவு தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.

அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சேகர் ரெட்டி, பிரேம் குமார், ஸ்ரீனிவாசலு, ராமச்சந்திரன், ரத்தினம் என 5 பேர் மீது பதியப்பட்ட 3 எப்ஐஆர் பதிவுகளில் 2 எப்ஐஆர் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என சேகர் ரெட்டி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஒரே குற்றத்திற்காக பதியப்பட்ட 3 எப்.ஐ.ஆர்.களில் 2வது மற்றும் 3வது எப்.ஐ.ஆர் பதிவுகளை ரத்து செய்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல் எப்.ஐ.ஆர் பதிவின் அடிப்படையில் சேகர் ரெட்டியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என நீதிபதி தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News