செய்திகள்

செஞ்சி அருகே டாஸ்மாக் அதிகாரியை தாக்கி ரூ.76 ஆயிரம் கொள்ளை

Published On 2018-06-22 13:57 IST   |   Update On 2018-06-22 13:57:00 IST
செஞ்சி அருகே டாஸ்மாக் அதிகாரியை தாக்கி ரூ.76 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49). இவர் செஞ்சி அருகே கடலாடிகுளத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு வேலை முடித்து விட்டு விற்பனையான பணம் ரூ.76 ஆயிரத்தை எடுத்து தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக அதே மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு புறப்பட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் ஏழுமலையை பின்தொடர்ந்து வந்தனர். செஞ்சி காப்புகாடு பகுதியில் பின்னால் மின்னல் வேகத்தில் வந்த கார் ஏழுமலை மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் நிலைதடுமாறிய ஏழுமலை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

அப்போது மர்ம மனிதர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். மிளகாய் பொடியை ஏழுமலையின் கண்ணில் தூவினர். அவர் கண்எரிச்சலில் துடித்தார். பின்னர் அவர்கள் ஏழுமலையை தாக்கினர்.

ஏழுமலை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.76 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை இயக்க முடியாததால் அதனை அங்கேயே நிறுத்தினர். ஏழுமலையின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

Tags:    

Similar News