செய்திகள்

நீதித்துறையை விமர்சனம் செய்வது தற்கொலைக்கு தள்ளுவதற்கு சமம் - நீதிபதி கிருபாகரன் வேதனை

Published On 2018-06-21 11:30 GMT   |   Update On 2018-06-21 11:30 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் வழக்கறிஞர்களும் நீதித்துறையை விமர்சனம் செய்வது தற்கொலைக்கு தள்ளுவதற்கு சமமானது என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். #Highcourt #MLAsDisqualified
சென்னை :

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்த பின்னர் டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து, கட்சி விதிகளை மீறிவிட்டதாகக் கூறி அவர்கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். சமீபத்தில் இந்த வழக்கு விசாரணை முடிந்து இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததால், வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆயினும், நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து பரவலாக பலரும் விமர்சனம் செய்து பேட்டியளித்தனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி கிருபாகரன், மனுதார்கள் மட்டுமல்ல வழக்கறிஞர்களும் நீதித்துறையை விமர்சனம் செய்வது தற்கொலைக்கு தள்ளுவதற்கு சமமானது என தெரிவித்தார்.

மேலும், எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தீர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த தங்க தமிழ்செல்வன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். #Highcourt #MLAsDisqualified 
Tags:    

Similar News