செய்திகள்

மயிலாடி அருகே தாய்-கல்லூரி மாணவருக்கு சரமாரி கத்திக்குத்து வீட்டுக்கு தீ வைப்பு

Published On 2018-06-20 17:22 GMT   |   Update On 2018-06-20 17:22 GMT
பணத் தகராறில் தாய் மற்றும் கல்லூரி மாணவரை சரமாரி கத்தியால் குத்தி விட்டு வீட்டுக்கு தீ வைத்து சென்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமத்தை அடுத்த மயிலாடி அருகே உள்ள லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் நாகர்கோவிலில் தையல் கடை நடத்தி வருகிறார். குமாரின் மனைவி பெயர் லதா. இந்த தம்பதியின் மகன் மெர்வின்ஜோஸ், நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

அதே ஊரை சேர்ந்தவர் போஸ் (60). இவர் தற்போது நாகர்கோவிலில் வசித்து வருகிறார். குமார், போசிடம் பணம் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. இந்த பணத்தை அவர் திருப்பி கேட்டதால் அவர்களுக்குள்  தகராறு ஏற்பட்டு முன் விரோதம் உருவானது. இந்த நிலையில் இன்று காலை குமார் வீட்டிற்கு போஸ் பணத்தை கேட்பதற்காக சென்றார். அப்போது வீட்டில் குமார் இல்லை. அவரது மனைவி லதாவும், மகன் மெர்வின்ஜோசும் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் தகராறு செய்த போஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மெர்வின்ஜோசையும், லதாவையும் சரமாரியாக குத்தினார். இதில் அவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. 

மேலும் போஸ் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டார். பிறகு வீட்டின் முன் அறையையும் தீ வைத்து கொளுத்தினார். இதனால் அந்த அறையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்தன. அதிஷ்டவசமாக தீ சமையல் அறைக்கு பரவாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையில் எத்தியால் குத்தப்பட்ட லதாவும், மெர்வினும் அலறிய சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் படுகாயத்துடன் இருந்த அவர்கள் 2 பேரையும் காப்பாற்றி கொட்டாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் போசையும், பொதுமக்கள் மடக்கிப்பிடித்து அஞ்சுகிராமம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பற்றி அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீடு புகுந்து தாய், மகனை கத்தியால் குத்தி வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News