செய்திகள்

காஞ்சீபுரத்தில் ராகுல்காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

Published On 2018-06-19 06:38 GMT   |   Update On 2018-06-19 06:38 GMT
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. #Congress #HappyBirthdayRahulGandhi
காஞ்சீபுரம்:

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 47-வது பிறந்த நாள்விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு காஞ்சீபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீ பெரும்புதூர், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் கட்சிக்கொடி ஏற்றியும், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர்.

மாவட்டத்தில் உள்ள சர்வ மதக் கோயில்களிலும் ராகுல் காந்தி நீடுழி வாழவும் அடுத்த பாரதப் பிரதமராகப் பதவி ஏற்க வேண்டியும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. மேலும் பல்லாயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் எம்பி விஸ்வநாதன் காஞ்சிபுரம் நகரமன்ற அலுவலகத்திற்கு எதிரே காங்கிரஸ் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து ராகுல் காந்தி நீடுழி வாழ வேண்டி பிரம்மாண்ட கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மேலும் ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு பழங்களும் பெட் ஷீட்டுகளும் வழங்கப்பட்டது.

திருக்கச்சி நம்பி தெருவில் அமைந்துள்ள திருவள்ளுவர் குருகுலத்தில் தங்கி பயின்று வரும் மாணவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

இதே போல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்போரூர் பூஞ்சேரி கூட்டுச் சாலையிலும், மகாபலிபுரம் கூட்டுச்சாலை கானாத்தூரிலும், மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் முன்னாள் எம்பி பெ,விஸ்வநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் காஞ்சீபுரம் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், நிர்வாகிகள் எஸ்.எல்.என்.எஸ்.விஜயகுமார், சாலபோகம் அருண், கோபால், வழக்கறிஞர்கள் சத்தியநாராயணன், மணிகண்டன், கிளார்குமார், விசு, முத்தியால்பேட்டை ராஜசேகர், சாதிக்பாட்சா, செந்தில, இசிஆர். அச்சுகன், ஓஎம்ஆர். சின்னராசா, டிராவல்ஸ் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவர் காஞ்சி. ஜீவீ. மதியழகன் தலைமையில் மேற்கு மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கொடியேற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சிக்கொடி ஏற்றி பிரம்மாண்ட கேக் வெட்டி ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கினர்.

இதில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் காஞ்சி ஜீவீ. மதியழகன், நிர்வாகிகள் சேரன், வீரபத்ரன், பச்சையப்பன், இராம.நீராளன், தென்னேரி சுகுமார், சம்பத், நாதன், சுகுமாரன், லோகநாதன், சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Congress #HappyBirthdayRahulGandhi
Tags:    

Similar News