செய்திகள்

தமிழகத்தில் வழக்கத்தை விட 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மைய இயக்குனர் தகவல்

Published On 2018-06-19 03:53 IST   |   Update On 2018-06-19 03:53:00 IST
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் தென்மேற்குபருவமழை தொடங்கி உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இப்போது அங்கும் கன மழை இல்லை. அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய உள்ளது.

கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக இரவிலும் அனல் தகிக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது வலு இழந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பான வெயிலை விட 3 டிகிரி அதிகரிக்கும்.

வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். வெப்பம் அதிகரிக்க கடல் காற்று மிக தாமதமாக வீசுவதே காரணம். அதேபோலத்தான் அடுத்த 3 நாட்களுக்கு வீசும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று வெயில் கடுமையாக இருந்தது. அதன் காரணமாக மெரினா கடற்கரையில் மக்கள் அதிக அளவில் கூடினார்கள்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

கலவை 2 செ.மீ., எண்ணூர், வால்பாறை, பரங்கிப்பேட்டை, சின்னக்கல்லாறு, நெய்வேலி தலா 1 செ.மீ. 
Tags:    

Similar News