பண்ருட்டி அருகே அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி கைது
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள பலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 40) தொழிலாளி. இவர் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவி விஜயலட்சுமி, தம்பி தினேஷ் மற்றும் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதேப்போல் குடிபோதையில் வீட்டில் இருந்த தம்பி தினேசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி தினேஷ் ஆத்திரம் அடைந்து கத்தியால் சதாசிவத்தின் கழுத்தில் குத்தினார். இதில் சதாசிவம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமரய்யா வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தினேசை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தினேஷ் வெளியூருக்கு தப்பி செல்வதற்காக சாத்திப்பட்டு பஸ் நிலையத்தில் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் குமரய்யா தலைமையிலான போலீசார் தினேசை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.