செய்திகள்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு

Published On 2018-06-12 11:13 IST   |   Update On 2018-06-12 11:13:00 IST
சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். #JactoGeoProtest #StalinMeetsJactoGeo
சென்னை:

பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும், 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான  ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை எழிலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது.



இந்த உண்ணாவிரதத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், செ.முத்துசாமி, வெங்கடேசன், அன்பரசு, தாமோதரன், சுரேஷ், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் மற்றும் மோசஸ் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தி.மு.க செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேசுவதாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் பேச உள்ளதாகவும் கூறினார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு மாமூல் கொடுத்து ஆட்சியை தக்க வைப்பதில் அ.தி.மு.க. அரசு தீவிரமாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். #JactoGeoProtest #StalinMeetsJactoGeo
Tags:    

Similar News