முதலியார்பேட்டையில் பெண்ணிடம் கத்தியை காட்டி ரூ.2 லட்சம் நகை பறிப்பு
புதுச்சேரி:
முதலியார் பேட்டை வாரியார் நகரை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மனைவி சித்ரா (வயது 42). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். மற்றொரு மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர். சித்ரா கணவரை விட்டு பிரிந்து 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று சித்ரா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட கும்பல் சித்ராவின் வீட்டுக்கு வந்தது. அவர்கள் சித்ராவின் கழுத்தில் கத்தியை வைத்து அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுக்கும்படியும், அப்படி கழற்றி கொடுக்காவிட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டியது.
இதனால் பயந்து போன சித்ரா அணிந்திருந்த தாலி செயின் உள்பட 8 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். இதையடுத்து அந்த கும்பல் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. அதே வேளையில் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை அந்த கும்பலிடம் இருந்து தப்பியது.
இதுகுறித்து சித்ரா முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.