செய்திகள்

அபிராமபுரத்தில் கத்திமுனையில் வாலிபர்களிடம் பணம்-செல்போன் பறிப்பு

Published On 2018-06-07 10:43 GMT   |   Update On 2018-06-07 10:43 GMT
சென்னை அபிராமபுரத்தில் கத்திமுனையில் வாலிபர்களிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

தாம்பரம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மணிகண்டபிரபு. இவர் தனது நண்பர் விக்னேஷ் குமாருடன் நேற்று இரவு 1 மணி அளவில் அபிராமபுரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சூளையில் உடல்நிலை சரியில்லாத நண்பரை பார்த்துவிட்டு இருவரும் வீடுதிரும்பி கொண்டிருந்தனர்.

மூப்பனார் பாலம் வழியாக டார்புல்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகில் சென்ற போது அவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழி மறித்தனர். பின்னர் 3 பேரில் ஒருவன் அவசரமாக போன் பேசவேண்டும் என்று கூறி மணிகண்டபிரபுவின் செல்போனை கேட்டு வாங்கினான்.

பின்னர் செல்போனை திருப்பி கொடுக்காமல் தன் சட்டை பையில் வைத்துக் கொண்டான்.

இந்த நேரத்தில் கொள்ளையர்களில் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டபிரபுவின் மணி பர்சை பறித்தான். விக்னேஷ்குமாரிடம் இருந்த ரூ.4 ஆயிரம் பணத்தையும் அவர்கள் பறித்தனர்.

இதனால் மணிகண்ட பிரபுவும், விக்னேஷ்குமாரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

அப்போது அந்த வழியாக இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்கள் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க உதவினர். இருப்பினும் பணத்துடன் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். 2 பேர் மட்டும் சிக்கினர்.

இதுபற்றி உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். கோர்ட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சிறப்பு உதவி ஆய்வாளர் அறிவழகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிடிபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களது பெயர் அப்பாஸ் (26), விக்கி (23) என்பது தெரியவந்தது.

அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. #Tamilnews
Tags:    

Similar News