செய்திகள்

பழனியில் இன்று பிரபல ரவுடி படுகொலை - போலீசார் விசாரணை

Published On 2018-06-06 09:49 GMT   |   Update On 2018-06-06 09:49 GMT
பழனியில் இன்று காலை பிரபல ரவுடியை ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி:

பழனி அடிவாரம் பகுதியில் தனியார் பார் உள்ளது. இதன் மேனேஜராக ராஜன் (வயது 54) உள்ளார். இன்று காலை 10.30 மணியளவில் வாலிபர் ஒருவரை ஒரு கும்பல் துரத்தி விரட்டி வந்ததைப் பார்த்தார். பார் அருகே உள்ள சந்தில் அந்த கும்பல் திடீரென கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டி தள்ளினர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூடியது.

இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அரிவாளுடன் அருகே இருந்த கடைக்கு சென்று அங்கிருந்த பொருட்களை சூறையாடி தகராறில் ஈடுபட்டனர்.

இது குறித்து அடிவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பழனி பாரதிநகரைச் சேர்ந்த காளிமுத்து மகன் செந்தில்குமார் (38) என தெரிய வந்தது. இவருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. மேலும் பலரிடம் தகராறு செய்ததாகவும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News