செய்திகள்

குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

Published On 2018-06-05 16:30 GMT   |   Update On 2018-06-05 16:30 GMT
அன்னவாசல் அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னவாசல்:

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வயலோகத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. திருவிழா நாட்களில், ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி செயலாளர், ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வயலோகம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவிற்கு வந்த உறவினர்களுக்கு சமைக்க தண்ணீர் இல்லாமல் கடும் அவதி அடைந்தனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் குழாயில் காலி குடங்களை வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போதிய குடிநீர் இருந்தும் வினியோகம் செய்யாத குடிநீர் தொட்டி இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.

இது குறித்து அன்னவாசல் வட்டார வளர்ச்சி அதிகாரி நாகராஜனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட ஊழியர்களை அனுப்பி உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப் பதாக உறுதி அளித்தார். இதையடுத்து சில மணி நேரத்தில் வயலோகம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், குடிநீர் தொட்டி இயக்குனர் இதேபோல பலமுறை சரிவர பணி செய்யாமலும், சொந்த காரணங்களுக்காக சில குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும் தெரிய வந்தது. இதனால் குடிநீர் தொட்டி இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அதிகாரி உறுதி அளித்து உள்ளார் எனக் கூறினார். 
Tags:    

Similar News