கொடைக்கானல் அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை
பெரும்பாறை:
கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராணி (வயது 16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த ராணி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் கொடைக்கானல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். ஊத்து அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானல் நோக்கி வந்த பஸ்சில் ராணி ஒரு வாலிபருடன் சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் ஊரல்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 24) என தெரியவந்தது. பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு தூண்டியது போலீஸ் விசாரணையில் தெரியவரவே அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.