செய்திகள்

கடலூர் அருகே கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2018-06-02 15:26 IST   |   Update On 2018-06-02 15:26:00 IST
கடலூர் அருகே முன்விரோத தகராறில் கணவன் மற்றும் மனைவியை அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
கடலூர்:

கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜுலு (வயது 55). விவசாயி.

இவர் அந்த பகுதியில் உள்ள தனது நிலத்தில் வாழை மற்றும் தர்ப்பூசணி பயிரிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் இவரது நிலத்தில் இருந்த தர்ப்பூசணியை திருடி கொண்டு இருந்தனர்.

இதனை கோவிந்த ராஜூலு உறவினர் தினேஷ் பார்த்து, அந்த கும்பலை தட்டிக்கேட்டார். அப்போது அந்த கும்பல் தினேசை சரமாரியாக தாக்கினார்கள். இதில் தினேஷ் காயம் அடைந்தார்.

இது தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜுலு மற்றும் அவருடைய மனைவி ஜோதி ஆகியோர் வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 15 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து கோவிந்தராஜூலு மற்றும் ஜோதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.

பின்னர் வீட்டில் இருந்த கார், டிராக்டர், இருசக்கர வாகனம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் முன்விரோதம் தொடர்பாக நடந்ததா? வேறு ஏதேனும் காரணமா? என்று கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News