செய்திகள்

கொடுங்கையூரில் கடையில் புகுந்த கொள்ளையர்களை மடக்கி பிடித்த போலீசார்

Published On 2018-05-31 10:30 GMT   |   Update On 2018-05-31 10:30 GMT
சென்னை கொடுங்கையூரில் செல்போன் கடையில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பெரம்பூர்:

சென்னை கொடுங்கையூரில் செல்போன் கடை நடத்தி வருபவர் பிரேம்குமார். இவர் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் 2 கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர்.

அவர்கள் செல்போன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கொடுங்கையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கமுத்து, ஏட்டு மணிவண்ணன் ஆகியோர் ரோந்து வாகனத்தில் வந்தனர்.

அப்போது செல்போன் கடையின் ‌ஷட்டர் கொஞ்சமே திறந்திருந்ததால் சந்தேகம் அடைந்தனர். அருகே சென்ற போது உள்ளே கொள்ளையர்கள் 2 பேர் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ‌ஷட்டரை வெளிப்புறமாக பூட்டிவிட்டு எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு விரைந்து வந்தார்.

உடனே போலீசார் 3 பேரும் ‌ஷட்டரை திறந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டினார்கள். போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் புளியந்தோப்பு பி.எஸ். மூர்த்தி நகரை சேர்ந்த மதன்குமார், வ.உ.சி. நகரை சேர்ந்த அபிமன்யூ என்று தெரிய வந்தது. இது தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று இதேபோல் கொடுங்கையூர் ஜி.என்.டி. சாலையில் 2 கடைகளில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Tags:    

Similar News