செய்திகள்

மனைவியுடன் தகராறில் மாயமான வாலிபர் முந்திரி தோப்பில் பிணமாக தொங்கினார்

Published On 2018-05-28 22:50 IST   |   Update On 2018-05-28 22:50:00 IST
புதுவை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாயமான வாலிபர் முந்திரி தோப்பில் பிணமாக தொங்கினார்.

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பம் காலனியை சேர்ந்தவர் சதீஷ் (வயது31). கூலித்தொழிலாளி. இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

சம்பவத்தன்று சதீஷ்க்கும் அவரது மனைவி ஜெயஸ்ரீக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது, இதையடுத்து மனைவியுடன் கோபித்து கொண்டு சதீஷ் மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து சதீஷ் மாயமானது குறித்து அவரது தாய் மங்கலட்சுமி கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆரோவில் போலீஸ் நிலையத்திற் குட்பட்ட முந்திரி தோப்பில் முந்திரி கொட்டை பொறுக்க நேற்று காலை சிறுவர்கள் சென்றனர். அப்போது ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு சிறுவர்கள் இதனை தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர் இதுபற்றி ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர் மாயமாகி இருந்த சின்ன கோட்டக்குப்பம் காலனியை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது. அருகில் அவரது மோட்டார் சைக்கிளும் கிடந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்தது.

மனைவியுடன் தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய சதீஷ் சம்பவத்தன்றே முந்திரிதோப்பில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News