செய்திகள்
கந்தர்வக்கோட்டை அருகே இன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாததால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்து இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் கல்லாக்கோட்டை பேருந்து நிலையம் அருகே திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் கந்தர்வக் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் மற்றும் போலீசார், அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.