செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: சரத்குமார் கண்டனம்

Published On 2018-05-26 04:11 GMT   |   Update On 2018-05-26 04:11 GMT
தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொடர் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கின்றது. நாட்டு பொருளாதார சுமையை விலையேற்றத்தின் மூலம் மக்கள் மீது திணிப்பது ஏற்புடையதல்ல. கர்நாடகத் தேர்தலின்போது 19 நாட்களாக பெட்ரோல், டீசலின் விலையை ஏற்றாமலும் தேர்தல் முடிவுக்கு பிறகு தொடர் விலையேற்றம் செய்வதும் மக்களை ஏமாற்றும் செயல்.

மக்கள் நலன், தொழில்கள், வணிகம் உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு மத்திய அரசு அறிக்கை மட்டுமே விடாமல், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பலமுறை வலியுறுத்தியிருந்தது போல பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு இவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும் எனவும், மாநில அரசின் வருவாய் பாதிக்கும் என்ற போதிலும் தமிழக அரசு பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டுவருவதற்கு முழு ஆதரவு நல்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News