செய்திகள்

ஜவுளி எடுக்க சென்ற மணப்பெண் திடீர் மாயம்- போலீசார் விசாரணை

Published On 2018-05-25 09:27 GMT   |   Update On 2018-05-25 09:27 GMT
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே நாளை மறுநாள் திருமணம் நடக்கவிருந்த நிலையில் ஜவுளி எடுக்க சென்ற மணப்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பாலமலை களக்காட்டை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் லதா (வயது23).

இவருக்கும் அதே பாலமலை பகுதி திம்பம்பதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் தமிழரசன் (28) என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்தது.

திருமணத்தையொட்டி புதிய ஜவுளி வாங்க இருவர் வீட்டாரும் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூருக்கு சென்றனர். அவர்களுடன் மணப்பெண் லதாவும் ஜவுளி எடுக்க சென்றார்.

ஜவுளி கடையில் உறவினர்கள் தங்களுக்கு பிடித்த புதிய துணிகளை தேர்வு செய்து வாங்கி கொண்டிருந்தனர்.

அப்போது மணமகளை தேடினர். ஆனால் அங்கு அவரை காணவில்லை. அவர்களுடன் வந்த புதுப்பெண் லதா திடீரென மாயமாகி விட்டார்.

இதனால் உறவினர்களிடையே பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. கடை உள்ளேயும், வெளியேயும் ஓடி வந்து தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

இது குறித்து புதுப்பெண்ணின் தந்தை அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுப்பெண் லதாவை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு யாருடனும் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் மாயமாகி விட்டாரா? என்ற பல்வேறு சந்தேகத்துடன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News