செய்திகள்

புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்- டிரைவர் கைது

Published On 2018-05-19 08:47 GMT   |   Update On 2018-05-19 08:47 GMT
புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் மது பாட்டிலகள் கடத்தப்பட்டது தொடர்பாக டிரைவரை கைது செய்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள பெரும்பாக்கம் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த காரை தடுத்து நிறுத்தி கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அவர்கள் காரில் சோதனை நடத்தினர். அந்த காரில் 192 மது பாட்டில்களும், 44 பீர் பாட்டில்களும் இருப்பதை கண்டு பிடித்தனர். உடனே அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

இதைத்தொடர்ந்து டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சென்னை அண்ணா நகரை சேர்ந்த தியாகராஜன் (வயது 35) என்பதும், புதுவையில் இருந்து சென்னைக்கு மதுப்பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து டிரைவர் தியாகராஜனையும், பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் மதுப்பாட்டில்களை திண்டிவனம் மது விலக்குப் பிரிவு போலீசாரிடம் ஒப் படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.#tamilnews
Tags:    

Similar News