செய்திகள்
ஊட்டியில் இன்று காலை இடி- மின்னலுடன் பலத்த மழை
ஊட்டியில் இன்று காலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் படகுசவாரி ஒத்தி வைக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை ஊட்டி படகு இல்லத்தில் படகுபோட்டி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. படகுசவாரியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
போட்டி நடத்த முயன்றபோது திடீரென இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளியுடன் பேய் மழை பெய்ததால் படகுசவாரி ஒத்தி வைக்கப்பட்டது. தொட்டபெட்டா சிகரம் அடர்ந்த பனியால் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதனை காணமுடியாமல் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
பலத்த மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.