மழையால் 3 நாட்கள் மின்தடை: மின்சார வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மரம் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சார வினியோகம் தடைபட்டது.
குறிப்பாக கடந்த சனிக்கிழமை மாலை பலத்த சூறாவளியுடன் 2 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் மரங்கள், மின்சார கம்பங்கள் முறிந்தன. இதனையடுத்து மின்தடை ஏற்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் மங்கலம் குள்ளேகவுண்டன் பாளையம் பிரிவு பகுதியில் 100-க்கணக்கான மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் தடை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குறை கூறினர். இந்நிலையில் பொதுமக்களே மரங்களை வெட்டி அகற்றினர். ஆனால் மின்சாரம் இன்று காலை வரை வினியோகம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக மின்தடையை சரிசெய்ய வில்லை எனக்கூறி இன்று காலை மங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அதிகாரிகள் பொதுமக்களிடம் கூறும்போது. இங்கு மட்டுமல்ல. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்ததால் மின் வினியோகம் தடை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக சரிசெய்து வருகிறோம். இன்டைக்குள் இந்த பகுதிக்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.