செய்திகள்

நிர்மலாதேவி விவகாரத்தில் மாணவர்கள் அமைப்பு புதிய வழக்கு - ஐகோர்ட்டில் விசாரணை

Published On 2018-05-10 09:26 GMT   |   Update On 2018-05-10 09:26 GMT
நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை:

புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

‘விருதுநகர் மாவட் டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி, உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி செல்போனில் மாணவிகளை வற்புறுத்தும் உரையாடல் ‘வாட்ஸ்அப்பில்’ வெளியானது. இதையடுத்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தின் தலைமையில், ஒரு விசாரணை குழுவை தமிழக கவர்னர் அமைத்துள்ளார். ஒரு குற்றச்செயலுக்கு இரு அமைப்பு விசாரணை நடத்தினால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே, நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கை, டி.ஐ.ஜி. பதவிக்கு குறையாத பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அந்த விசாரணையை இந்த ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக தலைமை செயலாளர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு பதில் அளிக்கும் படி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கு வருகிற 23-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக முன்கூட்டியே இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல், ஐகோர்ட்டில் முறையிட்டார்.

‘ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தின் விசாரணை முடிந்து, வருகிற 15-ந் தேதி அவர் தன்னுடைய விசாரணை அறிக்கையை தமிழக கவர்னரிடம் வழங்க உள்ளார். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த வழக்கு கடைசியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.


Tags:    

Similar News