வேதாரண்யத்தில் தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி குளத்தில் குதித்து தற்கொலை
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம், முதலியார் தோப்பைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் கலையரசி (வயது 18) கல்லூரி மாணவி.
இவர் வேதாரண்யத்தில் செயல்படும் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்த கலையரசி திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. இதுபற்றி சுப்பிரமணியன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் வீட்டின் அருகில் உள்ள குளத்தில் நேற்று பிணமாக மிதந்தார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். மாணவிக்கும், அவரது தாய்க்கும் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த கலையரசி குளத்தில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
மேலும் மாணவி சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? ஒருநாள் முழுவதும் மாயமான அவர் மறுநாள் குளத்தில் பிணமாக மிதந்ததின் பின்னணியில் ஏதும் மர்மம் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான கல்லூரி மாணவி குளத்தில் பிணமாக மிதந்தது வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.