செய்திகள்

108 ஆம்புலன்சு தாமதத்தால் இளம்பெண் மரணம்

Published On 2018-03-12 12:03 IST   |   Update On 2018-03-12 12:03:00 IST
திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இளம்பெண் 108 ஆம்புலன்சு வர தாமதம் ஆனதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாமல்லபுரம்:

கேளம்பாக்கத்தை அடுத்த கானத்தூர், ரெட்டி குப்பத்தை சேர்ந்தவர் நாகூரான். இவரது மனைவி குப்புலட்சுமி (வயது 25). இவர்கள் குடும்பத்தினர் 8 பேருடன் கடம்பாடியில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்க சென்றனர்.

பின்னர் அவர்கள் ஷேர் ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது.

இதில் குப்புலட்சுமி, உறவினர்கள் பொம்மி, ரகு, தமிழ்ச்செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் குப்புலட்சுமியின் வலது கால் நசுங்கியது.

இது குறித்து உடனடியாக ‘108’ ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்சு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே குப்புலட்சுமிக்கு மயக்கம் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்கு பின்னர் வந்த ஆம்புலன்சில் காயம் அடைந்த குப்புலட்மி உள்பட 4 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குப்புலட்சுமியின் கால் துண்டிக்கப்பட்டு சிகிச்சை அளிக் கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மேலும், பொம்மி, ரகு, தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து குப்புலட்சுமியின் உறவினர்கள் கூறும் போது,

விபத்து நடந்ததும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னரே ஆம்புலன்சு வந்தது. இதற்குள் குப்புலட்சுமி, அதிக ரத்த போக்கு ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக ஆம்புலன்சு வந்து இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று தெரிவித்தனர். #Tamilnews

Similar News