செய்திகள்

மயிலாடுதுறையில் மணல் லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி

Published On 2017-12-20 11:04 GMT   |   Update On 2017-12-20 11:04 GMT
மயிலாடுதுறையில் மணல் லாரி மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மதுரா நகர் குப்பன் குளம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கன்(வயது52). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரியை டிரைவர் பின் பக்கமாக நகர்த்தியுள்ளார்.

அப்பகுதி இருட்டாக இருந்ததால் லாரியின் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த ரெங்கன் இதனை கவனிக்கவில்லை. இதேபோல் டிரைவரும் சாலையோரம் நடந்து வந்த ரெங்கனை கவனிக்காமல் இருந்துள்ளார். இதில் பின்பக்கமாக வந்த லாரி மோதி அடியில் சிக்கிய ரெங்கன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதைக்கண்ட டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் இதுபற்றி மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் லாரியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அந்த லாரி அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News