செய்திகள்
காரைக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
காரைக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா கண்டனூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் காசியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கலையரசி (வயது 56) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
மகன், மகள் வெளியூரில் இருப்பதால் கலையரசி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு தூங்கச் சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 15 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்.