செய்திகள்
அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார்.

டெங்கு பரவ காரணமாக இருந்த 15 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2017-10-25 10:33 IST   |   Update On 2017-10-25 10:33:00 IST
சுகாதாரத்துறை சார்பில் டெங்கு பரவ காரணமாக இருந்ததாக 15 ஆயிரம் பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சிவகங்கை:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இன்று அவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார்.

குழந்தைகள் வார்டு, ஆண்கள், பெண்கள் வார்டு, காய்ச்சல் வார்டு பகுதிகள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் குறை கேட்டார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் தீவிர காய்ச்சல் ஓரளவு குறைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், நாமக்கல், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் படிப்படி யாக குறைந்து வருகிறது.

இன்று சிவகங்கை, மதுரை, நெல்லை மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் நான் ஆய்வு செய்கிறேன். காய்ச்சலை தடுக்க தற்போது மருத்துவதுறையுடன் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை இணைந்து பணியாற்றி வருகிறது.

காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். இங்கு போதுமான சிகிச்சைகள் உரிய வகையில் தரப்படுகிறது. எந்த நேரத்திலும் காய்ச்சலுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சுகாதாரத்துறை சார்பில் டெங்கு பரவ காரணமாக இருந்ததாக 15 ஆயிரம் பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீன் சாந்திமலர், சுகாதாரத்துறை இயக்குநர் விஜயன் மதமடக்கி ஆகியோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.

Similar News