செய்திகள்

தேவகோட்டையில் ராணுவ வீரர் வீட்டில் 36½ பவுன் கொள்ளை

Published On 2017-10-16 15:00 IST   |   Update On 2017-10-16 15:00:00 IST
தேவகோட்டையில் ராணுவ வீரர் வீட்டில் 36½ பவுன் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் 1-வது வீதியை சேர்ந்தவர் வின்சென்ட் அமலநாதன். இவர் ராணுவ வீரராக மத்தியபிரதேசத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ரோஸ்லின் அமலி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று ரோஸ்லின் அமலி வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இரவு அங்கேயே தூங்கினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு தனி அறையில் இருந்த பீரோவை திறந்து 36½ பவன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

இன்று காலை வீடு திரும்பிய ரோஸ்லின் அமலி கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை போலீஸ் இனஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News