செய்திகள்

பெருங்களத்தூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பலி

Published On 2017-08-18 14:48 IST   |   Update On 2017-08-18 14:48:00 IST
பெருங்களத்தூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 21) பெருங்களத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். பெருங்களத்தூர் நாகாத்தம்மன் கோவில் தெருவில் வீடு எடுத்து தங்கியிருந்தார்.

இன்று காலை ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார். கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது அதே கல்லூரிக்கு சொந்தமான பஸ் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்தது.

பஸ்சில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த கல்லூரி நண்பர்களிடம் பேசியபடியே ஆறுமுகம் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அப்போது மோட்டார் சைக்கிள் சறுக்கியதில் ஆறுமுகம் கீழே விழுந்தார். அவர் மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறியதில் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அவரை சேலையூரிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News