செய்திகள்

மதுராந்தகம் பகுதியில் மழை: வீடு இடிந்து விழுந்து பெண் பலி

Published On 2017-08-03 12:05 IST   |   Update On 2017-08-03 12:05:00 IST
மதுராந்தகம் பகுதியில் பலத்த மழையின்போது இடி தாக்கியதில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது பெண் உயிரிழந்தார்.
மதுராந்தகம்:

மதுராந்தகத்தை அடுத்த அச்சரப்பாக்கம், கன்னிமேடு இருளர் காலனி உள்ள அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வந்தவர் அய்யம்மாள். கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வந்தார்.

இவரது மகன் குமார் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்றிரவு அய்யம்மாள் வீட்டை பூட்டி விட்டு தூங்கினார். அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் திடீரென பலத்த மழை கொட்டியது.

இடி தாக்கியதில் அய்யம்மாளின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அய்யம்மாளின் உடலை மீட்டனர். அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. அனைத்தும் இடியும் நிலையில் உள்ளது.

இதனை சீர்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி இருந்தால் வீடு இடிந்து உயிர் பலி ஏற்பட்டு இருக்காது. மேலும் வீடுகள் இடிந்து விழுவதற்குள் அதனை சரி செய்ய வேண்டும்” என்றனர்.

மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News