செய்திகள்

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2017-07-23 14:46 GMT   |   Update On 2017-07-23 14:46 GMT
மயிலாடுதுறை அருகே மூவலூரில் குடியிருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க முற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே மூவலூரில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் காவிரி ஆற்றின் அருகே நேற்று டாஸ்மாக் கடை திறப்பதாக தகவல் அறிந்து இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாட்டாளிமக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரேம்குமார், மாவட்ட செயலர் ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் விமல் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் திரண்டு புதியதாக திறக்க இருந்த கடையின் முன்பு சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடு துறை டிஎஸ்பி.கலிதீர்த்தான் மற்றும் குத்தாலம் இன்ஸ்பெக்டர் சுகுணா, மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் என்பதால் மதுபிரியர்களும் குவிந்தனர்.

முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் கேட்டபோது, கோழிக்கடை திறக்கபடும் என்றனர். ஆனால் டாஸ்மாக் கடை திறக்க முற்பட்டதால் போராட்டம் நடத்துகிறோம் என்றனர். இது தொடர்பாக நாளை (24-ந் தேதி) தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கபடும் என போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

அதே நேரம் மது குடிப்பதற்காக வந்தவர்கள். டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என சத்தம் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News