செய்திகள்
கதிராமங்கலத்தில் கடையில் கருப்பு கொடி கட்டியிருப்பதை படத்தில் காணலாம்

கதிராமங்கலத்தில் 3-வது நாளாக கடையடைப்பு: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

Published On 2017-07-03 04:56 GMT   |   Update On 2017-07-03 04:56 GMT
கதிராமங்கலத்தில் தடியடி நடத்திய போலீசார் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து இன்று 3-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் இன்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவிடைமருதூர்:

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் கச்சா எண்ணை எடுத்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டிருந்த பகுதியில் போடப்பட்டிருந்த முள் செடிகளுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதனை கண்டித்து கதிராமங்கலத்தில் இன்று (திங்கட்கிழமை) 3-வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் கடை வீதி வெறிச்சொடி காணப்பட்டது. தடியடி நடத்திய போலீசார் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து பொதுமக்கள் இன்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இருந்தனர்.


இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து 5 பேர் கொண்ட தொழில் நுட்ப குழுவினர் இன்று கதிராமங்கலம் வந்தனர். அவர்கள் எண்ணெய் கசிவு ஏற்பட்ட குழாயை ஆய்வு செய்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இனி கசிவு ஏற்படாமல் இருக்க என்னென்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

கதிராமங்கலத்தில் மீண்டும் மக்கள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக கிராமத்தை சுற்றிலும் 20 இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஓ.என்.ஜி.சி. கிணறு உள்ள 11 இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 200 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கதிராமங்கலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் செல்லும் பஸ்களில் கதிராமங்கலத்துக்கு எந்த பொதுமக்களும் ஏறி, இறங்கவில்லை. போலீசார் தான் பஸ்களில் வருவதும், செல்வதுமாக உள்ளனர்.
Tags:    

Similar News