ஸ்ரீமுஷ்ணத்தில் ஆசிரியை வீட்டில் புகுந்த 5 அடி நீள கருநாகபாம்பு: தீயணைப்பு படையினர் பிடித்தனர்
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுந்தரி (வயது 35). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை இவர் வீட்டில் குழந்தைகளுடன் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் திடீரென்று 5 அடி நீளமுள்ள கருநாக பாம்பு புகுந்தது.
இதைப்பார்த்ததும் சுந்தரி மற்றும் குழந்தைகள் கூச்சலிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டுக்குள் புகுந்த கருநாக பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு கருவேப்பிலங்குறிச்சி காட்டில் கொண்டு விடப்பட்டது.
பிடிபட்ட கருநாகபாம்பு விஷத்தன்மை கொண்டதாகும். பாம்பு பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.