செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக கொட்டிய கோடை மழை: அம்மாபேட்டையில் 62.4 மி.மீ. பதிவானது

Published On 2017-05-19 19:19 IST   |   Update On 2017-05-19 19:19:00 IST
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 62.4 மி.மீ. பதிவானது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த வாரத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஆனால் இடையில் சில நாட்கள் பெய்யவில்லை.

இதனால் பகல் நேரங்களில் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது. மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். அவர்கள் மழையை எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று மாலை திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தன.

இரவு 7.45 மணிக்கு மேல் இடி மின்னலுடன் 25 நிமிடத்துக்கு மேலாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் லேசான தூரலுடன் மழை நீடித்தது. இந்த மழை காரணமாக ரோடுகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம், நாச்சியப்பா வீதி, அகில் மேடு வீதி மற்றும் 46 புதூர் பகுதி உள்ளிட்ட பகுதிகளில்மின் தடை ஏற்பட்டது. சில இடங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று இரவு மட்டும் ஈரோட்டில் 43 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஈரோட்டைப்போல மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 62.4 மி.மீட்டரும், தாளவாடியில் 61 மி.மீட்டரும், கொடிவேரியில் 50 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அம்மாபேட்டையில் நேற்று முன்தினமும் பரவலாக பெய்த மழை நேற்றும் நீடித்ததால் அந்த பகுதி மக்களும், விவசாயிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெருந்துறையில் 27 மி. மீட்டர் மழை பெய்துள்ளது. இடி மின்னலுடன் காற்றின்றி பெருந்துறை டவுன், துடுப்பதி, சீனாபுரம், காஞ்சிக் கோவில், விஜயமங்கலம், ஈங்கூர், எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த திடீர் மழையால் பெருந்துறை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டது.

இதேபோல பவானி, சத்தியமங்கலம், சென்னிமலை, வரட்டுபாளையம், கவுந்தபாடி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது.

Similar News