செய்திகள்

தமிழகத்தில் மூடிய மதுக்கடைகளை திறக்க கூடாது: ஜி.கே.மணி

Published On 2017-05-06 10:15 IST   |   Update On 2017-05-06 10:15:00 IST
தமிழகத்தில் மூடிய மதுக்கடைகளை அரசு திறக்கக் கூடாது என புதுக்கோட்டையில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு வளர்ச்சி பற்றியோ, வறட்சியை போக்குவதிலோ முனைப்பு காட்டாமல் இருந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகள் இல்லாத வறட்சி இப்போது கோர தாண்டவமாடுகிறது. தமிழகம் தற்போது நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் மத்திய அரசு தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்காமல் இருப்பது வேதனைக்குரியது.

வறட்சியை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பிரச்சனையில் தமிழகத்தில் கட்சி வேறுபாடு இல்லாமல் ஒரே அணியாக இருக்க வேண்டும். கொடநாடு கொள்ளை சம்பவத்தில் தமிழக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழக அரசு மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க ஆர்வம் காட்டுகிறது. இதை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்துகின்றனர். மூடிய கடைகளை திறக்க கூடாது. தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. முக்கியமாக மேட்டூர் அணை தூர்வாரப்பட வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர், பதிவாளர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிகளை உடனே நிரப்ப வேண்டும். மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News