வி.சிறுத்தைகள் கொடி கம்பம் சேதம்: சாலை மறியல்- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே உள்ள கருவாழக்கரை மேலையூரில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் நடப்பட்டு இருந்தது. இதனை நேற்று இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
இது பற்றி இன்று காலை தெரியவந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேலையூர் மெயின் ரோட்டில் திரண்டு இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் செம்பனார் கோவில் போலீசார் சம்பவ இத்திற்கு சென்று சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களிடம் ஜாதி மோதலை உருவாக்கும் வகையில் சில அரசியல் கட்சியினர் பின்னணியில் இருந்து கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கை எடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.
இதன் காரணமாக மயிலாடுதுறை- பூம்புகார் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.