செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே போதை மருந்து கலந்த கள் விற்பனை: 2 பேர் கைது

Published On 2017-04-23 11:56 GMT   |   Update On 2017-04-23 11:56 GMT
ஜெயங்கொண்டம் அருகே போதை மருந்து கலந்த கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 60 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து தங்கிக்கொண்டு பதநீர் இறக்கி விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமானூர் பகுதியில் சிலர் பதநீர் இறக்குவதாக கூறி தடை செய்யப்பட்ட கள் இறக்கி அதில் அதிக அளவு போதை மருந்து பவுடர் கலந்து விற்பனை செய்வதாக அரியலூர் எஸ்.பி. அனில்குமார் கிரிக்கு புகார்கள் வந்தது.

இது குறித்து மது விலக்கு போலீசாருக்கு உத்தர விட்டார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் அதிக அளவு போதை பொருள் கலந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 13 பேர் கைது செய்தனர். இச்சம்பவத்தையடுத்து, அரியலூர் மாவட்டம், முழுவதும் பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்குவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

தடையை மீறி ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கொம்மேடு மற்றும் வடவீக்கம் பகுதிகளில் கள் இறக்கி விற்பனை செய்வதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின்பேரில் எஸ்.ஐ. சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது அங்குகள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்த மயிலாடுதுறை மண்ணிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் மகாதேவன் (45), அதேபோன்று வட வீக்கத்தில் விற்பனை செய்துகொண்டிருந்த விருது நகர் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் அன்பு (40) இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 60 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

Similar News