செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் போதை மருந்து கலந்த கள் விற்ற 13 பேர் கைது

Published On 2017-04-21 15:33 IST   |   Update On 2017-04-21 15:34:00 IST
அரியலூர் மாவட்டத்தில் போதை மருந்து கலந்த கள் விற்பனை செய்த 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

தமிழகத்தில் பனை மரங்களில் இருந்துகள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு இடங்களில் தடையை மீறி கள் இறக்கப்பட்டு வருகிறது. அதனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி தொழிலாளர்கள் பலர் பதநீர் இறக்கி விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் திருமானூர் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட கள் இறக்கி, அதில் அதிக அளவு போதை மருந்து பவுடர் கலந்து விற்பனை செய்வதாக அரியலூர் மாவட்ட மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு அனுமதியின்றி கள் இறக்கப்பட்டு, அதில் அதிக அளவு போதை மருந்து கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் மாவட்டத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்பட பல்வேறு இடங்களிலும் போதை மருந்து கலந்த கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக ஓலையூர் பகுதியில் கள் விற்பனை செய்த திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயராமன் (வயது 45), பெரியவளையம் கிராமத்தில் விற்பனை செய்த ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த மைனர் (50) மற்றும்பெரியதத்தூரில் விற்பனை செய்த பாண்டியன்(36) உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களிடமிருந்து போதை மருந்து கலந்த 30 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தையடுத்து அரியலூர் மாவட்டம் முழுவதும் பனை மரங்களில் இருந்து பதநீர் உள்பட பல்வேறு பொருட்களை எடுப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Similar News