செய்திகள்

ரவுடி ஸ்ரீதரின் ரூ.3 கோடி மதிப்புள்ள வீடு பறிமுதல்: அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2017-02-23 16:11 IST   |   Update On 2017-02-23 16:11:00 IST
காஞ்சீபுரத்தில் உள்ள ரவுடி ஸ்ரீதரின் ரூ.3 கோடி மதிப்புள்ள வீட்டை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவன் மீது கொலை, ஆள் கடத்தல், நிலம் அபகரிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.

இதுபற்றி சென்னை மத்திய குற்றப்பிரிவு, காஞ்சீபுரம் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சென்னை அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் தேடுவதை அறிந்த ஸ்ரீதர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு தப்பி சென்று விட்டான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து வந்த அவரது மனைவி குமாரியிடம் சென்னை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினர்.

பின்னர் குமாரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள ரூ.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து முடக்கப்பட்ட சொத்துக்களை தங்கள் வசம் கொண்டு வரும் பணியில் அமலாக்கத் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று மதியம் சென்னை அமலாக்கப்பிரிவு துணை ஆணையர் ஆனந்தி தலைமையிலான அதிகாரிகள், காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே எல்லப்பன் நகர் முதல் தெருவில் உள்ள ஸ்ரீதரின் வீட்டுக்கு சென்றனர்.

அவர்கள் அந்த வீட்டை பறிமுதல் செய்வதாக தெரிவித்து வீட்டு முன்பு அதற்கான விளம்பர பலகை மற்றும் நோட்டீசு ஒட்டினர்.

அப்போது வீட்டிற்குள் ஸ்ரீதரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் இருந்தனர். அவர்கள் வீட்டை காலி செய்ய 10 நாட்கள் அவகாசம் கேட்டனர். இதையடுத்து குறிப்பிட்ட நாட்களுக்குள் வீட்டை காலி செய்யுமாறு அவர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஸ்ரீதரின் வீடு 3 ஆயிரம் சதுர அடி கொண்டது. இதன் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.

அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கையால் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Similar News