2026 Union Budget அறிவிப்பு: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் அரிய கனிமவள மண்டலங்கள் - முக்கியத்துவம் என்ன?
- சுரங்கம் அமைக்கப்பட்டு கனிமங்கள் எடுக்கப்படும்.
- இந்தியா அரிய வகை கனிமத் தேவைகளுக்குப் பெருமளவு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியை நம்பியுள்ளது.
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில், கனிமவளங்கள் நிறைந்த மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பிரத்யேகமான அரிய கனிமவள மண்டலங்கள் (Rare Earth Corridors) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 4 மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் சிறப்பு வழித்தடம் அமைக்கப்படும்.
சுரங்கம் தோண்டுதல், பதப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இவை அமைக்கப்டுடுகிறது.
பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "இந்த அரிய கனிமவள மண்டலங்கள் மூலமாக நம் நாட்டிலேயே கனிம சுரங்கம் அமைக்கப்பட்டு கனிமங்கள் எடுக்கப்படும்.
கனிமங்களை எடுப்பது மட்டுமல்லாமல் அவற்றை உற்பத்தி செய்வது, அதுதொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
இந்தியா அரிய வகை கனிமத் தேவைகளுக்குப் பெருமளவு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியை நம்பியுள்ளது.
அரிய வகை கனிமங்கள் மின்சார வாகனங்களின் மோட்டார்கள், காற்றாலைகள், ஸ்மார்ட்போன்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை உபகரணங்களைத் தயாரிக்க மிக அவசியமானவை.
எனவே பட்ஜெட் அறிவிப்பு உள்நாட்டிலேயே கனிம உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.